2 மாதங்களுக்குப் பிறகு பிறகு உத்தரகாண்டில் 48 உடல்கள் மீட்பு!
கேதார்நாத்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் பகுதியில் இருந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
புகழ்பெற்ற கேதார்நாத் பகுதியில் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. சேதம் அதிகம் ஏற்பட்டது கேதார்நாத் பகுதியில்தான்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, மாநில போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளை செய்து வருகிறார்கள்.அப்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக கருதப்படும் 48 பேரின் உடல்கள் கிடைத்தன. அவற்றுக்கு அங்கேயே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
மேலும் அங்கிருந்து ரூ.5 லட்சம் பணம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டன.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக உத்தரகாசி, ராணிகட், ருத்ரபிரயாக் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்த 4 பேர் மந்தாகினி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அங்கு நடைபெற்று வரும் சாலைப்பணிகள் உள்ளிட்ட நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications