திருவனந்தபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த இடதுசாரிகளின் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்!
திருவனந்தபுரம்: சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சோலார் ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக முடியாது என்று மறுத்து வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான இடது ஜனநாயக முன்னணி வலியுறுத்தி வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது தலைமைச் செயலக ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல்வர் உம்மன் சாண்டியின் வாகனத்தைத் தவிர மற்ற அமைச்சரின் வாகனங்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முடியவில்லை. இருப்பினும் போராட்டக்காரர்கள் சிலர் உம்மண் சாண்டியின் காரையும் வழிமறிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும் இடதுசாரி தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், உம்மன் சாண்டிக்கு தெரிந்தே இந்த ஊழல் நிகழ்ந்துள்ளது. தமது உறவினர் ஒருவர் லஞ்சப் புகாரில் கைதானதால் ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார். அதேபோல் உம்மன் சாண்டியும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இப்போராட்டத்தில் இடதுசாரிகளுடன் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவே கவுடாவும் கலந்து கொண்டார்.