தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணீர் விட்டு அழுத நடிகை ரம்யா... ஆறுதல் சொன்ன நடிகர்கள்

மண்டியா மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யா போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்டியாவில் வேட்புமனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத வகையில் ரம்யாவின் வளர்ப்பு தந்தை ஆர்.டி.நாராயண் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
வளர்ப்பு தந்தையின் மரணத்தின் துயரத்தில் மீளமுடியாமல் தவித்த ரம்யாவை முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர், நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ஆறுதல் கூறியதோடு, தேர்தல் போட்டியில் இருந்துபின் வாங்கவேண்டாம் என்று ஆலோசனை கூறினர்.
கட்சி தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்ட ரம்யா, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் தோன்றி முகம் காட்டினால் போதும் என்று கூறினர்.
இதனையடுத்து நடிகை ரம்யா திங்கள்கிழமை முதல் தேர்தல்பிரசாரத்தை தொடங்கினார். மண்டியாவில் பிரசாரத்தை தொடங்கிய நடிகை ரம்யா, முன்னதாக காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் உணர்ச்சிவயப்பட்ட ரம்யா, வளர்ப்புதந்தையை நினைத்து அழத்தொடங்கினார்.
பின்னர், வாகனத்தில் வீதிவீதியாக சென்று ரம்யா வாக்கு சேகரித்தார். வாகனத்தில் ஏறியதும் மக்களை நோக்கி கைகூப்பிய ரம்யா, உணர்ச்சி மேலிட குலுங்கி குலுங்கி அழுது கண்ணீர் வடித்தார். அப்போது உடனிருந்த அமைச்சர்கள் அம்பரீஷ், மகாதேவப்பா, கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுளாநாயுடு உள்ளிட்டோர் ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
துக்கத்தை அடக்கமுடியாமல் கைகூப்பியபடியே அழுகையுடன் ரம்யா வாக்கு திரட்டினார். நடிகை ரம்யாவை காண சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். நடிகை ரம்யாவுக்கு ஆதரவாக நடிகை சுமலதா உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications