நிலைமைக்கேற்ப திருப்பித் தாக்கும் சுதந்திரம் ராணுவத்துக்கு உள்ளது! - ஏகே அந்தோனி

உள்நாட்டில் தயாரான, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஏ.கே.அந்தோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், "காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், அவ்வப்போது ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப, எதிர்த் தரப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் உள்ளது," என்றார்.
சமீபத்தில் இந்திய வீரர்கள் 5 பேர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில், தங்களது நிலையை ஒரே நாளில் மாற்றிக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு, தற்போது நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கேள்விக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியே பதில் அளிக்க முடியாது என்றார் அந்தோனி.
எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் அந்தோனி, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போல் உடையணிந்து வந்த பயங்கரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினர் என்று கூறினார்.
அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து மறுநாளே தனது நிலையை மாற்றிக் கொண்டு, பாகிஸ்தான் ராணுவம் மீது அந்தோனி குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அடிக்கடி மீறுவது பற்றியும், எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் நடப்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications