வதேராவின் நிலக் கொள்ளை.. சோனியாவுக்கு வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் பகுஜன், சமாஜ்வாடி!
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு ஹரியானாவில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நிகழ்த்திய நிலக் கொள்ளை விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் அவை நடவடிக்கைகள் மாலை 3 மணிவரை அடுத்தடுத்து ஒத்திவைக்க வேண்டிய நிலை உருவானது.
இது தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் உத்தரபிரதேச மாநில முதல்வருமான மாயாவதி, ராபர்ட் வதேரா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?. சோனியா காந்தி இதற்கு பொறுப்பேற்று கொண்டால் எங்கள் கட்சி அதற்கு அனுமதிக்காது. யாரோ ஒருவர் தவறு செய்திருக்கலாம். அவர்களது உறவினர்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்றார்.
இதேபோல் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது. இது ஒரு மாநில அளவிலான விவகாரம். மாநில அளவிலே இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.