கள்ளக்காதலிலையை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு மனைவியுடன் தப்பிய கணவர்
பொள்ளாச்சி: திருமணம் செய்து கொள்ளுமாறும், மனைவியை விட்டுப் பிரிந்து வந்து விடுமாறும் வற்புறுத்திய தனது கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு பின்னர் தனது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பருடன் தலைமறைவான நபரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பிரகாஷ் குமார். இவரது மனைவி 32 வயதான சத்யபாமா. இவர்கள் இருவரும் ஊஞ்சவேலமபட்டி கிராமத்தில் சமீபத்தில் வாடகைக்கு குடியமர்ந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றனர். ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பிரகாஷ் குமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துப் போய் பார்த்தபோது அங்கு ஒரு இளம் பெண் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் சிதைந்து போயிருந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண்ணின் பெயர் ஜெகதாம்பாள் என்றும் 28 வயதாவதும், அவர் நாகேந்திர குமார் என்பவரின் மனைவி என்றும் தெரிய வந்தது.
ஜெகதாம்பாளும், பிரகாஷ் குமாரும் கள்ளக்காதலர்கள். இந்த நிலையில் சத்யபாமாவை விட்டு விட்டு தன்னுடன் வந்து விடுமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தி வந்துள்ளார் ஜெகதாம்பாள். ஆனால் இதை ஏற்கவில்லை பிரகாஷ் குமார். மேலும் தனது மனைவி மற்றும் நண்பர் ரூபன்ராஜ் என்பவரிடமும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெகதாம்பாளை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் பிரகாஷ் குமார். அங்கு வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு மூன்று பேரும் தப்பியோடி விட்டனர்.
போலீஸார் அவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். அதில் நாகர்கோவில் அருகே பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.