போலீஸ் பக்ருதீன், கூட்டாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு: ஏடிஜிபி மஞ்சுநாதா
சென்னை: பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஏடிஜிபி மஞ்சுநாதா அறிவித்துள்ளார்.
போலீஸ் பக்ருதீன், பிலால், மாலிக், மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில், பறவை பாதுஷா ஆகிய நால்வரும் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு, சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, வேலூர் வெள்ளையன், மதுரை பாஜக பிரமுகர் பால்கடை சுரேஷ் கொலை வழக்கு என நான்கு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வருகின்றனர்.

பால்கடைக்காரர் கொலையில்
போலீஸ் பக்ருதீனுக்கு உதவியதாக இஸ்மத் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்ட்டியில் விசாரிக்கப்பட்ட போது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த பால்கடைக்காரர் சுரேஷ் குமாரை கொலை செய்யாவிட்டால் தன்னை கொன்று விடுவதாக போலீஸ் பக்ருதீன் மிரட்டியதாக கூறியுள்ளார்.

மதுரையில் உலா
போலீஸ் பக்ருதீன் கூட்டாளிகளை மாநிலம் முழுவதும் சல்லடை போட்டு போலீஸ் தேடி வரும் நிலையில் இவர்கள் அனைவரும் மதுரையில் சர்வசாதாரணமாக நடமாடி வருவதாகவும் புதூர் அப்துல்லா, நெல்பேட்டை தவுகீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வீடு வீடாக சோதனை
போலீஸ் பிடியில் உள்ள புதூர் அப்துல்லாவிற்கும், பக்ருதீனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவனது உறவினர்கள் அதிகம் வசிக்கும் புதூர் ரவிவர்மா நகர், சிட்கோ காலனி, சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

ஸ்லீப்பர் செல்கள்
இன்னும் முடிக்கவேண்டிய காரியங்கள் பாக்கி இருக்கிறது. அதுவரை பக்ருதீன் கூட்டாளிகளையும், அவருக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்லீப்பர் செல்களின் நிழல்களைக்கூட நெருங்க முடியாது என்று போலீஸ் பிடியில் சிக்கியுள்ள புதூர் அப்துல்லா, நெல்பேட்டை தவுகீப் ஆகியோர் கூறியுள்ளனர்.

ரூ. 20 லட்சம் பரிசு
இந்த நிலையில் போலீஸ் பக்குருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் இருப்பிடம் குறித்து தகவல் தந்தால் ரூபாய் 20 லட்சம் பரிசு தரப்படும் என்று சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு போஸ்டர் விமான நிலையம், ரயில்வே நிலையம், காவல்நிலையங்களில் ஒட்ட தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications