காமன்வெல்த் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க ம.தி.மு.க. மாணவர் அணி தீர்மானம்
சென்னை: காமல்ன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து, தமிழர் இனபடுகொலைக்கு காரணமான இலங்கையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ம.தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்:
'நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் மாணவர்களிடையே மாவட்ட, மாநில அளவில் போட்டி நடத்துவது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் பரிசு மற்றும் விருதுகளை வைக்கோ மூலம் வழங்குவது.
18 வயது ஆகும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
காமல்ன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து, தமிழர் இனபடுகொலைக்கு காரணமான இலங்கையை நீக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பது தாய் மொழி கல்வியே. ஆங்கிலத்தை மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளையும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்களையும் வழங்க வேண்டும்.
பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை அந்தந்த பள்ளியிலேயே நடத்த வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
மருத்துவ கல்விக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
2 லட்சம் மாணவ-மாணவிகளை ம.தி.மு.க உறுப்பினர்களாக சேர்ப்பது.
மேற்கண்டவை உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மல்லை சத்யா, இமயம் ஜெயராஜ், செந்திலதிபன், அழகுசுந்தரம், ஈஸ்வரன், பாஸ்கர சேதுபதி, மு.மாயன், மணவை தமிழ் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications