கராச்சியில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார் தாவூத்... துண்டா தகவல்
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். கராச்சி நகரில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் பத்திரமாக வசித்து வருகிறார் என்று தகவல் வெளியிட்டுள்ளார் டெல்லி போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா.
70 வயதான துண்டா, இந்திய, நேபாள எல்லையில் வைத்துப் பிடிக்கப்பட்டார். தற்போது அவர் டெல்லி போலீஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மிகப் பெரிய தீவிரவாதியான துண்டாவிடமிருந்து பல்வேறு உபயோகரமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸாரிடம் துண்டா கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் வருமாறு...
ஐஎஸ்ஐயுடன் நெருக்கமான தொடர்பு
பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவேன். அவர்களுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தேன். பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளேன்.
தீவிரவாத தலைவர்களுடன் சந்திப்பு
நான் பாகிஸ்தானில் இருந்தபோதும், அங்கு போய் வந்தபோதும் பல்வேறு தீவிரவாத தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.
கராச்சியில் இருக்கிறார் தாவூத்
தாவூத் இப்ராகிமுடன் எனக்கு நல்ல தொடர்பும், பழக்கமும் உண்டு. அவர் கராச்சியில்தான் இருக்கிறார். அவருக்கு ஐஎஸ்ஐ உரிய பாதுகாப்பு கொடுத்து பத்திரமாக வைத்துள்ளது. அவரது வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
2010ல் முதல் சந்திப்பு
நான் தாவூத் இப்ராகிமை 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக சந்தித்துப் பேசினேன். அவர்தான் என்னை அழைத்துப் பேசினார்.
நடமாட்டம் குறைவு
கராச்சியில் தாவூத் இப்ராகிம் இருந்தாலும் கூட அவரால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாது. ஐஎஸ்ஐ அவருக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவர்களைத் தாண்டி அவரால் எங்கும் போக முடியாது. அவரது நடமாட்டம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மசூத் அஸார், லக்வி, சயீத்துடன் நல்ல தொடர்பு
பாகிஸ்தானில் நான்இருந்தபோது லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத், மௌலானா மசூத் அஸார், ஜாகி உர் ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளேன் என்று கூறியுள்ளார் துண்டா.
மிகப் பெரிய பயங்கரவாதி
துண்டா சிக்கியிருப்பது மிகப் பெரிய விஷயம் என பாதுகாப்புத்துறையினர் கருதுகின்றனர். அபு ஜிண்டாலை விட மிகப் பெரிய கைது இது என்றும் வர்ணிக்கப்படுகிறது. காரணம், துண்டாவின் பின்னணி அப்படி.
குண்டுகள் தயாரிப்பதில் வல்லவர்
துண்டா, வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவராம். எத்தகைய குண்டையும் சில மணி நேரங்களில் தயாரித்து விடுவாராம். பல தீவிரவாத தலைவர்களுடன் அவருக்கு நல்ல பழக்கமும், நெருக்கமும் இருந்துள்ளது. பல முக்கியமான பாகிஸ்தான் தீவிரவாத தலைவர்கள் குறித்த முழு விவரமும் இவரிடம் உள்ளதாம்.
நான்கு நாடுகளில் நடமாட்டம்
இந்தியா, பாகிஸதான், வங்கதேசம், நேபாள் ஆகிய நாடுகளுக்குப் பலமுறை இவர் போயுள்ளார். இந்தியாவில் நடந்த பல நாச வேலைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.
ஆட்கள ஏற்பாடு செய்வதில் கில்லாடி
நாச வேலைகளுக்கு ஆட்களை ஏற்பாடு செய்வதிலும், திட்டமிடுவதிலும், அதை செயல்படுத்துவதிலும் இவர் கில்லாடியாம். எனவே இவரை மிகப் பெரிய அளவில் லஷ்கர் அமைப்பு பயன்படுத்தி வந்துள்ளது. சொன்னவேலையை கச்சிதமாக செய்து முடிப்பாராம் துண்டா.
கள்ள நோட்டு புழக்கத்திலும்
வெடிகுண்டுகளைத் தயாரித்து அனுப்புவது மட்டுமல்லாமல், கள்ள நோட்டுக்களை இந்தியாவில் பெருமளவில் புழக்கத்தில் விடவும் துண்டா பயன்படுத்தப்பட்டுள்ளார்.
மதரசாக்கள்
பாகிஸ்தானில் மெக்துத் இஸ்லாம் இ தர் அல் பனூன் என்ற பெயரில் பல மதரசாக்களை இவர் நடத்தி வருகிறாராம். இவற்றின் மூலம் நிதி வசூலித்து அதைக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மூளைச் சலவை செய்வதில் நிபுணர்
இந்தியாவில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்து இழுத்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்து நாசகாரப் பாதைக்குத் திருப்பி விடுவதில் துண்டா கில்லாடியாம். இவர் மூலம் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பிய அப்பாவிகள் எக்கச்சக்கம் என்கிறார்கள்.
நூற்றுக்கணக்கானோரை சீரழித்தவர்
துண்டா மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீவிரவாதப் பாதைக்குத் திருப்பப்பட்டுள்ளனராம். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி உள்ளிட்டவற்றை அளிப்பது இவரது வேலையாம்.
சீக்கிய தீவிரவாதிகளுக்கும் நெருக்கமானவர்
சீக்கிய தனி நாடு கோரி போராடி வரும் பப்பர்கல்சா அமைப்பும் கூட துண்டாவுடன் நெருக்கம் பாராட்டியுள்ளது. 2010ம் ஆண்டு வங்கதேசம் வழியாக பஞ்சாபுக்குள் வெடிகுண்டுகளைக் கொண்டு வர துண்டாவின் உதவியை அந்த அமைப்பின் தலைவர் வத்வா சிங் நாடினாராம்.
பாகிஸ்தானில் தயாரித்து இந்தியாவுக்குள்
அந்த வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் வைத்து தயாரிக்கப்பட்டு, பின்னர் வங்கதேசம் வழியாக பஞ்சாப் அல்லது டெல்லிக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டதாம். ஆனால் துண்டாவின் கூட்டாளிகளை வங்கதேச போலீஸார் கைது செய்ததால் இந்தத் திட்டம் பாழானதாம்.
பேச்சில் வல்லமை
பேசிப் பேசியே ஆளை மடக்குவதில் வல்லவராம் துண்டா. அவரது பேச்சைக் கேட்டுத்தான் பலர் தீவிரவாதிகளாக மாறினராம்.
தீவிரவாத அமைப்புகளுக்கு கெஸ்ட் லெக்சர்
இவரது பேச்சுத் திறமை காரணமாக பல தீவிரவாத அமைப்புகள் தங்களது அமைப்பினர் மத்தியில் வந்து உரையாற்றுமாறு துண்டாவை அழைப்பது
வழக்கமாம்.
ஒரே கல்லில் பல மாங்காய்கள்
துண்டாவிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் போதும், அத்தனை ஏற்பாடுகளையும் அவரே செய்து கொடுத்து விடுவாராம். அதாவது திட்டமிடுதல், ஆட்கள் மற்றும் நிதி திரட்டுதல் மற்றும் செயல்படுத்துதல் என அத்தனை வேலைகளையும் செய்து கொடுத்து விடுவாராம்.
இந்தியராக இருந்தும்
இந்தியாவில் பிறந்தவர்தான் இந்த துண்டா. 1985ம் ஆண்டு தீவிரவாத வேலைகளில் முதல் முறையாக இறங்கினார். மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் இவரது உறவினர்கள் சிலர் மதக் கலவரத்தில் கொல்லப்பட்டதால் இவர் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பினாராம்.
சபிக்கும் சகோதரர்கள்
துண்டா கைது செய்யப்பட்டதால் இந்தியாவில் வசிக்கும் அவரது உறவினர்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். குறிப்பாக அவரது சகோதர் மற்றும் சகோதரி ஆகியோர் இதை வரவேற்றுள்ளனர். இவரால் எங்களது குடும்பத்தினர் கடந்த 20 வருடமாக பல இன்னல்களை அனுபவித்து விட்டோம்.. இனிமேலாவது நாங்கள் நிம்மதியாக இருப்போம். இவரை எங்களது அண்ணன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது என்று கோபத்துடன் கூறியுள்ளனர் அவர்கள். உ.பியில் வசிக்கிறார்கள் இவர்கள்.