ரூ.1,25,000 கோடி செலவில் உலகின் மாபெரும் உணவுப் பாதுகாப்பு திட்டம்: சோனியா தொடங்கி வைத்தார்
டெல்லி: உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு இணையான திட்டம் இந்த உலகில் எதுவுமே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கனவு திட்டமான உணவு பாதுகாப்புத் திட்டத்தை காங்கிரஸ் ஆளும் டெல்லியில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று தொடங்கி வைத்தார்.
ரூ1.25 லட்சம் கோடி மதிப்பிலான உணவு பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் லோக்சபா தேர்தலில் கணிசமான வாக்குகளைக் கைப்பற்ற முடியும் என்று கருதுகிறது காங்கிரஸ் கட்சி. இதற்காகவே அவசர சட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது.
டெல்லியில் தொடக்கம்
பின்னர் நாடாளுமன்றம் கூடியதால் அவசர கட்டம் கைவிடப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ராஜிவ் காந்தி பிறந்த நாளான இன்று டெல்லியில் இத்திட்டத்தை சோனியா காந்தி தொடங்கி வைத்தார்.
சோனியா பெருமிதம்
இந்நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு இணையான திட்டம் உலகில் எதுவும் இல்லை என்று பெருமிதம் தெரிவித்தார்.
முதல் மாநிலம் ஷீலா தீட்சித்
நாட்டிலேயே டெல்லி மாநிலம்தான் உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது என்றார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.
மாதம் 5 கிலோ தானியம்
மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு ரூ.1 முதல் ரூ.3க்கு மாதாமாதம் 5 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.
ரூ1 லட்சத்து 25 ஆயிரம் கோடி செலவு
ரூ.1,25,000 கோடி செலவில் இது தான் உலகின் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு திட்டம் இதுவே.
பெண்தான் தலைவி
18 வயதிற்கு மேற்பட்ட மூத்த பெண் தான் குடும்பத் தலைவியாக இத்திட்டத்திற்கான ரேஷன் கார்டில் குறிப்பிடப்படுவார்.
கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு...
இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு கர்ப்பிணியும், பாலூட்டும் தாய்மார்களும் பிரசவ காலம் மற்றும் குழந்தை பிறந்து 6 மாத காலம் வரை இலவசமாக உணவு பெறுவார்கள்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு...
உள்ளூர்களில் உள்ள அங்கன்வாடிகள் மூலம் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படும்.