3வது நாளாக முடங்கியது ஐ.ஓ.பி. வங்கி சேவை: வாடிக்கையாளர்கள் அவதி
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேவை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தடுமாறினர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கணினி சர்வர் கடந்த 19ஆம் தேதி திடீரென பழுதானது. இதனால், பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் சென்ற வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து 3 நாட்களாக சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கோடிக்கணக்கில் பண பரிமாற்றமும் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து கிளைகளின் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
இதனால் அவசரத்துக்கு பணம் எடுக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் வேறு வங்கிகளில் அவர்கள் பணம் எடுத்து சென்றனர். கடந்த 1ஆம் தேதி இதேபோல் வங்கியின் கம்ப்யூட்டர் சர்வர் பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில், சர்வரில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சரி செய்யப்படாததால் கடந்த 3 நாட்களாக வங்கி சேவை முடங்கியுள்ளது. இதனால், பண பரிமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏமாற்றத்துடனேயே திரும்பி செல்கின்றனர்.
அவசரத்துக்கு ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்ட வாடிக்கையாளர்கள், வேறு வங்கியின் ஏ.டி.எம்.களில் பணம் எடுத்து சென்றனர். இன்று பிற்பகலில் கோளாறு சரியாகி விடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications