ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்- அரசு வக்கீலுக்கு திமுக உதவ கோர்ட் அனுமதி!!

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு முட்டுக்கட்டுகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் கடந்த வாரம் திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் திமுக எம்.பி.க்கள் செல்வகணபதி, தாமரைச்செல்வன் ஆகியோர் ஒரு மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் வாதாட அனுமதிக்க வேண்டும், அரசு வழக்கறிஞர் புதியதாக நியமிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
இதற்கு ஜெயலலிதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது, திமுக தரப்பினர் தங்களது வாதத்தை எழுத்து மூலமாக அளிக்கலாம் என்றும் அரசு வழக்கறிஞருக்கு திமுக வழக்கறிஞர் உதவலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி கொடுத்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications