முதுமையில் தனிமை: பெங்களூரில், இறந்து 4 மாதங்களான பாட்டியின் அழுகிய சடலம் மீட்பு
பெங்களூர்: பெங்களூரில், இறந்து கிட்டதட்ட நான்கு மாதங்களுக்கு மேலாகிய 53 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் சிதைந்த உடல் புதர் மண்டிய பங்களா ஒன்றிலிருந்து போலீசாரால் மீட்கப் பட்டுள்ளது.
பரபரப்பான் நகரமான பெங்களூரின் முக்கிய பகுதியான இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தவர் 53 வயது ஷீலா ரெட்டி. இரண்டு மாடி கொண்ட சொந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவரைப் பார்ப்பதற்கு பெரும்பாலும் உறவினர்கள் வருவதில்லையாம். யாராவது எப்போதாவது வந்து உணவு கொடுத்துச் செல்வார்களாம்.
மற்றப்படி ஆள் அரவமற்ற அந்த பங்களாவில் வசித்து வந்த ஷீலா, அக்கம் பக்கத்தாரிடமும் அவ்வளவாக பழகுவது இல்லையாம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், அதை அலட்சியப் படுத்திய போலீசாரோ, ‘ஏதாவது நாய் செத்த வாடையாக இருக்கும் என சாக்குபோக்கு சொல்லி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, ஷீலாவைக் காண ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது அண்ணன் சங்கர் ரெட்டி வந்துள்ளார். வீட்டிற்குள் இருந்து துர்நார்றம் வீசவே, சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார். அங்கே அவரது தங்கையில் எஞ்சிய உடல் பாகங்கள் அழுகிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் விரைந்து வந்து பார்த்த போது, ஷீலாவின் அழுகிய உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், வீட்டை சோதனை செய்து பார்த்த போலீசாருக்கு, வீட்டில் உணவுப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லையாம். எனவே, அவர் பசிக் கொடுமையால் கூட இறந்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது, ‘ஷீலா இறந்து நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகியிருக்கலாம்' என கூறியுள்ளனர். மேலும், ஷீலாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்து நான்கைந்து மாதங்களாக வீட்டிற்குள்ளேயே பிணமாகக் கிடந்த வயதான பெண்மணியின் நிலைமை நம் நாட்டின் முதியவர்கள் நலன் குறித்த அவல நிலைமையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.