முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணை நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழக, கேரள அரசின் வாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. இதற்கு கேரளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கேரளாவோ, உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க சட்டம் ஒன்றை இயற்றியது. பின்னர் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு அணையின் வலுவை ஆய்வு செய்தது. இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றது.

இறுதி விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்துக்குரியதாக இருப்பதால் அணைக்கு உரிமை கொண்டாட முடியும் என்று வாதிடப்பட்டது. மேலும் அணையின் உறுதித் தன்மை குறித்து சந்தேகம் இருந்தால் ஆனந்த் குழுவினரை அழைத்து சந்தேகம் கேட்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கர்நாடகாவைப் போல கேரளாவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுகிறது என்று கூறப்பட்டது.
கேரளாவோ அணை வலுவாக இல்லை.. புதிய அணை கட்ட வேண்டும் என்று வாதிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ தங்களது தீர்ப்பை முடக்கும் வகையில் கேரளா தனிச்சட்டம் இயற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று இருதரப்பு இறுதி விசாரணை முடிவடைந்தது. இரண்டு தரப்பும் தங்கள் வாதங்களை 10 பக்கங்களுக்குள் எழுத்துப் பூர்வமாக 2 வார காலத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications