காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?: ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 23ம் தேதி நான் தான் முதன்முதலில் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் மற்ற கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் ஏழு கோடி தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்பது பற்றி மத்திய அரசு இதுவரை எதையும் கூறவில்லை. இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை இந்திய அரசு ஆரம்பத்திலிருந்தே இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தான் செயல்பட்டு வருகிறது.
காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாலோ அல்லது ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டாலோ, அந்த நாடுகளை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் இந்தியா தான் தீவிரம் காட்டியிருக்கிறது.
காமன்வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலான 65 ஆண்டுகளில் பாகிஸ்தான், ஃபிஜி தீவுகள், ஜிம்பாப்வே, நைஜீரியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளித்திருக்கிறது. 1999 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா தான் மேற்கொண்டது.
பாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இரு முறை நீக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இலங்கைக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுப்பதற்கு மட்டும் தயங்குவது ஏன்? பாகிஸ்தானுக்கு ஒரு நீதி.... இலங்கைக்கு ஒரு நீதியா?
உத்தமர் வேடம் போட முயலும் ராஜபக்சேவுக்கு இந்தியா எந்த வகையிலும் துணை போகக் கூடாது. மாறாக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக்கூடாது.
வரும் நவம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நட்பு நாடுகள் மூலமாக கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்களைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் ஒன்றாக வாழ வாய்ப்பே இல்லை என்பதால், தமிழர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து, அதை தமிழீழமாக அறிவிப்பது குறித்து ஐ.நா.மன்றத்தின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications