மெட்ராஸ் கபே... தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கருணாநிதி
சென்னை: மெட்ராஸ் கபே படத்தில் ஈழத் தமிழ்ப் போராளிகளை அவமதித்துள்ளதாக கூறப்படுவது குறித்து தமிழக அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது கேள்வி பதில் பாணி அறிக்கையில் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் கபே படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து தமிழக அரசுதான் பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போராளிகளை அவமதித்துள்ளனரா..
மெட்ராஸ் கபே படம் தொடர்பான சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மெட்ராஸ் கபே திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. ஈழத் தமிழ்ப் போராளிகளை அவமதிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தகவல் உண்மையா..
அந்தத் தகவல் உண்மையா என்பதை தமிழக அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதுதான் முறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.

ஞானதேசிகன் பேச்சு
இலங்கையை எதிரி நாடாக கருத முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியிருப்பது குறித்து அவர் தெரிவித்துள்ள பதிலில், ராஜீவ் காந்தி அவர்களைச் சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தாக்கினான். அவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தியைத் தாக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை என்று சொல்லிக் கொண்டான்.

இன அழிப்புச் செயல்
இலங்கைச் சிங்கள அரசு தொடர்ந்து இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்திருக்கின்றது. இத்தகைய இன அழிப்புச் செயலுக்காக உலக நாடுகள் எல்லாம் இலங்கையை போர்க் குற்றவாளி என்று சுட்டிக் காட்டுகின்றன.

இலங்கைக்கு அதிகரிக்கும் அழுத்தம்
ஏன், நேற்றுகூட, சர்வதேச பொது மன்னிப்பு சபை, இலங்கை உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும், நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை இந்தியா எழுப்ப வேண்டுமென்றும், இலங்கையின் நிகழ்வுகள் குறித்துச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நம்பகத்தன்மையும், சுதந்திரமும் உள்ள அமைப்பு மூலம் விசா ரணை நடைபெற வேண்டியது அவசியம் என்றும், இந்த விஷயத்தில் இலங்கை அரசு தாங்கள் உறுதியளித்தபடி நடந்துகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.

பிரதமரே கவலைப்பட்டுள்ளார்
அதுமாத்திரமல்ல; தமிழக மீனவர்களை அன்றாடம் இலங்கைக் கடற்படையினர் கைது செய்வதும், தாக்குவதும், சிறையில் அடைப்பதும் நீடித்துக் கொண்டே போகிறது. பிரதமரே அதைப்பற்றி இலங்கை அமைச்சரிடம் நேற்றைய தினம் கூடப் பேசியிருக்கிறார்.

விக்கிரமசிங்கேவும் சொல்கிறார்
இலங்கையின் முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரம சிங்கே அவர்களே, இலங்கையில் தமிழர்கள் துயரப்படுவது உண்மைதான் என்று கூறுகிறார். ஆனால் அதை ஞானதேசிகன் இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகள் என்கிறார்.

வேதாந்தம் பேசும் ஞானம்
இலங்கையிலே தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவது உள்நாட்டு அரசியல் நிகழ்வா? தொப்புள் கொடி சொந்தங்களின் துயரத்தைக் கண்டும் காணாமல் கபட நாடகம் போட முடியுமா? ஆனால் இலங்கையை எதிரி நாடாகக் கருதினால் தமிழர்கள் பிரச்சினை குறித்து யாரிடம் பேசுவது என்று ஞானதேசிகன் வேதாந்தம் பேசியிருக்கிறார். எதிரி நாடுகளிடம்தான் பிரச்சினை பற்றிப் பேச நேரிடும்.

விதண்டாவாதம் பேசித் திரியும் ஞானதேசிகன்
ஞானதேசிகனைப் போன்றவர்கள் இப்படி விதண்டாவாதம் பேசுவதால்தான் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா விற்குள் இருந்துகொண்டே அளித்த பேட்டியில் கச்சத் தீவை ஒப்படைக்க முடியாது என்று தோள் தட்டிச் சூளுரைக்கிறார். அதனால்தான் நேற்று அங்கும் இங்கும் தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையை சிங்களவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்கள் என்று நான் எழுதியிருந்தேன்.

ஜி.கே.வாசன் கண்டித்துள்ளார்
மத்திய அமைச்சர்கள் தம்பி ஜி.கே. வாசன் இலங்கை அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று கூறியிருக்கிறார். அமைச்சர் நாராயணசாமி அவர்கள், இலங்கை மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று கூறுகிறார்.

ஞானோபதேசம்
ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன்தான் இலங்கையை நட்பு நாடாகக் கருத வேண்டும் என்று ஞானோபதேசம் செய்கிறார் என்று சாடியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications