பஸ் சீட்டுக்குக் கீழ் துப்பாக்கி.. கத்தி.. ஈரோடு அரசுப் பேருந்தில் 'திகில்' பறிமுதல்!
விழுப்புரம்: ஈரோட்டிலிருந்து சென்னை வந்த அரசுப் பேருந்தில், சீட்டுக்குக் கீழே கத்தி, துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரைக் கொல்ல இவை கொண்டு வரப்பட்டன என்று தெரியவில்லை.
இன்று அதிகாலையில் இந்த பரபரப்பு பறிமுதல் நடந்தது. அதாவது ஈரோட்டிலிருந்து ஒரு அரசு விரைவுப் பேருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
விழுப்புரம் அருகே பேருந்து வந்தபோது திடீரென ஒரு பயணி எழுந்து கண்டக்டரிடம் போய் எனது பணத்தைக் காணவில்லை. வண்டியை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வண்டியை நேராக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்குத் திருப்பினார் டிரைவர். அங்கு போலீஸாரிடம் புகார் தரப்பட்டது. இதையடுத்து பேருந்துக்குள் ஏறிய போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு இருக்கையின் கீழ் சோதனை செய்தபோது அங்கிருந்து ஒரு கத்தியும், துப்பாக்கியும் சிக்கியது. இதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதை யார் கொண்டு வந்தது என்று அவர்கள் பயணிகளிடம் கேட்டனர். ஆனால் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை. இதையடுத்து அத்தனை பேரின் கைரேகைகளையும் போலீஸார் பதிவு செய்தனர்.
அதில் 5 பேர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களை மட்டும் கீழே இறக்கி அழைத்துச் சென்றனர். பின்னர் பஸ்சை செல்ல அனுமதித்தனர்.
அந்த ஐந்து பேர் யார், அவர்கள்தான் இதைக் கொண்டு வந்தனரா, எதற்காக கத்தி, துப்பாக்கி பஸ்சில் வந்தது, யாரைக் கொல்லத் திட்டம்... என்ன சதி என்பது குறித்து தீவிர விசாரணை
நடந்து வருகிறது.