அமெரிக்காவில், 4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் வாழ்ந்த ‘கடல் நத்தை’
நியூயார்க்: விளையாடும் போது தவறுதலாக சிறுவனின் முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர்.
விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும் வேளைகளில் உடலில் வீக்கம் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அத்தகைய வீக்கங்களில் சில முள் போன்றவைக் கிடைப்பதுண்டு.
ஆனால், அமெரிக்கச்சிறுவனின் கால் வீக்கத்தில் இருந்து வெளிவந்த சிறிய நத்தையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
முட்டியில் காயம்...
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், ஆரஞ்ச் கவுன்டி பகுதியில் வாழ்ந்து வருபவர் ராச்சல். இவரது 4வயது மகன் பால் பிராங்ளின். கடந்த மாதம், பிராங்க்ளின் வீட்டருகே உள்ள புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அச்சிறுவனுக்கு முட்டியில் காயம் உண்டானது.
சீழ் பிடித்த புண்...
சிறிய காயம் தானே என அவனது பெற்றோர்கள் அசட்டையாக இருந்து விட, மூன்று வாரத்துக்கு பிறகு, சிறுவனின் மூட்டுகளில் வீக்கம் உண்டானது. தொடர்ந்து அந்த வீகம் சீழ் பிடித்து புண்ணாக மாறியது.
கடல் நத்தை...
வீட்டிலேயே முதலுதவி செய்ய நினைத்த சிறுவனின் பெற்றோர், வீக்கத்தை அழுத்தி சீலை வெளியேற்றினர். அப்போது, கல் போன்று ஒன்று வெளியேறியது. தானாக நகர துவங்கிய அந்தக் கல்லை உற்று நோக்கிய போது தான், அது கடல் நத்தை என்பது தெரிய வந்தது.
மீன் தொட்டியில் வாழ்கிறது...
அதிர்ந்து போன அவர்கள், பின்னர் அந்த குட்டி நத்தையை பிடித்து கழுவி தற்போது, மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனராம்.
முட்டை உடைந்து நத்தையானது...
பிராங்ளின் கீழே விழுந்த போது, புல்வெளியில் கிடந்த நத்தையின் முட்டை, சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்தின் வழியாக உள் சென்று வளர்ந்து, நத்தையாக வெளியேறியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.