நீதிபதி சச்சார், ஆமீர் கானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் சச்சார் கமிட்டியின் தலைவர் நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான் ஆகியோர் தங்களது துறைகளில் சிறந்து விளங்குவதை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறது.
வரும் 24ம் தேதி நடைபெறும் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படும். விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் பல்லம் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் சயிதா சயிதைன் ஹமீத் தலைமை தாங்குகிறார். துணை வேந்தர் பேராசிரியர் முஹம்மது மியான் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு இவ்விழாவில் பட்டங்கள் வழங்கப்படும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.