தெலுங்குதேசம் கட்சியில் குடும்ப மோதல்- என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா ராஜினாமா
தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு அடுத்த தலைவராக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். லோகேஷூக்கு தமது மகளை திருமணம் செய்து கொடுத்திருப்பவர் என்.டி. ராமாராவின் மகன்களில் ஒருவரான பாலகிருஷ்ணா. அவர் தமது முழு ஆதரவையும் மருமகன் லோகேஷூக்கு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் என்.டி.ராமாராவின் மற்றொரு மகனான ஹரிகிருஷ்ணாவின் மகன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் தெலுங்குதேசம் கட்சியில் தலையெடுக்கத் தொடங்கினார். இதற்கு பாலகிருஷ்ணா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனாலேயே நேற்று நடைபெற்ற பாலகிருஷ்ணாவின் மற்றொரு மகளின் திருமணத்தில் ஹரிகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர். யாரும் கலந்து கொள்ளவில்லை. இதன் உச்சமாக இன்று தமது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஹரிகிருஷ்ணா அறிவித்துள்ளார்.
இருப்பினும் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாம் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஹரிகிருஷ்ணா.