இன்று சென்னைக்கு 375வது பிறந்த நாள்!
சென்னை: மனிதர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு 375வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சென்னை நகரம் உருவானது. எழும்பூர், திரு வல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இருந்தன. இவை காலப் போக்கில் சென்னையுடன் இணைக்கப்பட்டன.
ஆங்கிலேயர் வசமிருந்த காரணத்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்த வேகத்தில் சென்னைக்கும் வந்தன. தொலைபேசி, ரெயில், சினிமா, தபால் போன்றவை அடுத்த சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு அறிமுகமாகின.
சினிமா தியேட்டர்கள்
1895-ம் ஆண்டு மே 7-ந்தேதி சென்னை நகர வீதிகளில் முதன் முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. ஆனால் அந்த சமயத்தில் லண்டனில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. தென்னிந்தியாவின் முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் அமைந்தது.
அண்ணாசாலை தபால் நிலைய கட்டிடத்தில் அப்போது எலெக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. தமிழகத்திலேயே முதல் சினிமாக்கொட்டகை இதுதான்.
சங்கீத சபாக்கள்
ஒருபுறம் எளிய மக்களின் பாட்டுப் புத்தகங்களை விற்பனை செய்த குஜிலிபஜார் பிரபலமாக விளங்கியது. மற்றொரு புரம் சாஸ்த்ரீய சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் வேரூன்றி வளர்ந்தன.
தமிழ்நாடாக மாற்றம்
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராஸ் மாகாணத்தின் தலை நகரானது சென்னை. சென்னை மாகாணமாக இருந்தது கடந்த 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னையான மெட்ராஸ்
மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகரின் பெயர் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை நகரின் மக்கள் தொகை கடந்த 1646 ஆம் ஆண்டு 19 ஆயிரமாக இருந்தது. இன்றைக்கு 7 லட்சம் பேர்வரை சென்னையில் வசிப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
சென்னையின் அடையாளம்
பரந்து விரிந்த மெரீனா கடற்கரை, விவேகானத்தர் இல்லம், மிகப்பெரிய கோவில்கள் என சென்னைக்கு பல அடையாளங்கள் உள்ளன.
ஷாப்பிங் மால்கள்
இன்று சென்னை மாநகரம் புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஓட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடனும் இளமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது.
கிரேட்டர் சென்னை
கிராமங்கள் ஒன்றினைந்து நகரமாகி, பின்னர் மாநகரமாகி இன்றைக்கு கிரேட்டர் சென்னையாக உயர்ந்து நிற்கிறது. சென்னையின் 375 வது பிறந்த தினத்தை கொண்டாட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன.