தீ குழந்தை ராகுல் டிஸ்சார்ஜ்… பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கர்ணன்- ராஜேஸ்வரி தம்பதிக்கு 2வதுதாக பிறந்த ராகுல் என்ற குழந்தையின் உடலில் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த 8ம் தேதி முதல் ராகுலுக்கு, சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ராகுலுக்கு ‘ஸ்பொன்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்டன்' என்ற அதிசய நோய் இருப்பதாக குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் நாராயண பாபு கூறியிருந்தார்.
காயங்கள் ஆறின
இதைத் தொடர்ந்து குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் குழந்தையின் உடலில் தானாக தீப்பற்றி எரிவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்தது.
15 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குழந்தையின் உடலில் உள்ள தீக்காயங்களும் முழுமையாக குணம் அடைந்து விட்டன. இதைத் தொடர்ந்து குழந்தை ராகுல், டாக்டரின் கண்காணிப்பில் இருந்து வந்தான்.
மனோதத்துவ சிகிச்சை
இதனிடையே, குழந்தையின் உடலில் தீப்பிடித்தது குறித்து குழந்தையின் பெற்றோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவமனையின் மனநலப்பிரிவு துறை தலைவர் டாக்டர் ராஜரெத்தினம் மனோதத்துவ சிகிச்சை அளித்தார்.
ராகுல் டிஸ்சார்ஜ்
மேலும், குழந்தை ராகுல் பூரண குணம் அடைந்து விட்டதால் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். டாக்டர்கள் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் அறிவுரை
மனதளவில் தைரியமூட்டவும், குழந்தையை எவ்வாறு கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது மனதளவில் தைரியமாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.