மணல் அள்ளும் விவகாரம்: விழுப்புரத்தில் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை
விழுப்புரம்: விழுப்புரத்தில் பா.ம.க. ஒன்றிய செயலாளர், பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பா.ம.க. ஒன்றிய செயலாளராக திருமலை வாசன் என்பவர் செயல்பட்டு வந்தார். இவருக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருட்டு மணல் அள்ளுவது தொடர்பாக பல வருடங்களாக போட்டி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த திருமலை வாசன், தன் வேலையை முடித்துவிட்டு சுமார் 2 மணியளவில் வெளியே வந்து ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து விழுப்புரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு திருமலை வாசனின் அண்ணன் ரவி என்பவர் ஆறுமுகம் தரப்பினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அன்று முதல் இருதரப்பினருக்கும் பகை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று திருமாலை வாசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications