உத்தரப்பிரதேசத்தில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
லக்னோ: மும்பையில் ஊடகத்துறையைச் சேர்ந்த பெண்போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் உத்தரப்பிரதேசத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் டெய்னிக் ஆஜ் நாளேட்டில் பணியாற்றி வந்தவர் 50 வயதான ராகேஷ் ஷர்மா. மூத்த பத்திரிகையாளரான அவர் நேற்று மாலை பணிமுடிந்த பின்னர் எடவா நகரில் உள்ள வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததால் மீண்டும் தமது இரு சக்கர வாகனத்தில் புறப்படத் தயாராக இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டது. இதைத் தொடர்ந்து ராகேஷ் ஷர்மா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ராகேஷ் ஷர்மா ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்? அவரை சுட்டது யார்? என்பது குறித்து உத்தரப்பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த மறுநாள் மற்றொரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications