நீதிபதி சச்சார், ஆமீர் கானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய உருது பல்கலைக்கழகம்
ஹைதராபாத்: நீதிபதி சச்சார் மற்றும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் பெருமைபடுத்தியது.
ஹைதராபாத் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா 23.08.2013 அன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் சயீதா சயிதானி ஹமீத் தலைமை வகித்தார். துணை வேந்தர் பேராசிரியர் முஹம்மது மியான் ஆண்டறிக்கை வாசித்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் பல்லம் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் தனது உரையில் கடந்த 15 ஆண்டுகளில் உருது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி சிறப்புற இருந்து வருவதாக குறிப்பிட்டார். பல்கலைக்கழக விரிவாக்கம் குறித்து தான் மிகவும் மகிழ்வடைவதாகக் குறிப்பிட்டார். கல்வித்துறையில் ஹைதராபாத்தின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்கு ஐந்து மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் இருப்பது இதன் தனிச்சிறப்பு என்றார்.
அதனைத் தொடர்ந்து கௌரவ டாக்டர் பட்டங்கள் தத்தம் துறைகளில் சிறந்து விளங்கி வரும் நீதிபதி சச்சார் மற்றும் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நீதிபதி சச்சார் அவர்கள் தனது ஏற்புரையில் கல்வியாளர் சர் சையத் அஹமத் கான் சிந்தனைகள், மகாகவி அல்லாமா இக்பாலின் சீர்திருத்தக் கருத்துக்கள் உள்ளிட்டவற்றை மாணாக்கர்கள் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட கேட்டுக் கொண்டார்.

நடிகர் ஆமிர்கானின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டத்தை அவரது தாயார் ஜீனத் தாஹிர் ஹுசைன் கானும், அவரது சகோதரி நிகாத்தும் பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாணாக்கர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 11 முனைவர் பட்டங்கள் (இவர்களில் ஐந்து பேர் பெண்கள்), பல்வேறு படிப்புகளில் தங்க பதக்கம் பெற்ற 38 பேர், 41 எம்.ஃபில் பட்டங்கள், 1046 முதுநிலை பட்டங்களும் வழஙகப்பட்டன. வரும் ஆண்டிலிருந்து இளநிலைப் பட்ட வகுப்புகள் துவங்கப்பட இருப்பதாக துணை வேந்தர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications