சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ 10 உயர்கிறது?
பாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நிதிச்சுமையை சரிக்கட்டுவதற்காக இந்த விலை உயர்வை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.51 ஆக இருந்தது. இது ‘கிடுகிடு'வென இறங்கி ரூ 65 ஆகிவிட்டது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன.
இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் போன்ற எரிபொருள் விலையும் உயர்ந்ததால், மத்திய அரசுக்கான மானிய சுமை ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.இதனை சரிக்கட்டுவதற்காக பெட்ரோலிய பொருட்களின் விலையை சற்று உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
சமையல் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்ததற்கும், விலையை சமீபத்தில் உயர்த்தியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் வேறு வழி இல்லாததால், சமையல் கியாஸ் விலையை ஒரு சிலிண்டருக்கு மாதம் ரூ.10 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.25 உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி விரைவில் முடிவு எடுக்கும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே விஜய் கெல்கர் நிபுணர் குழு, சமையல் கியாசுக்கான மானியத்தை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.