உ.பி.யில் கொடூரம்: 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் படுகொலை!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்களும் தாக்குதல்களும் தொடர் கதையாகி வருகின்றன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பத்திரிகையாளர் ஜகவுல்லா, சாக்குமூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.
கோத்வாலி தெஹத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோளா பகுதியில் அவர் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் மாநிலத்தில் பத்திரிகையாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களுக்கு முன்புதான் உள்ளூர் ஹிந்தி நாளிதழின் பத்திரிகையாளர் ஒருவர் எடாவா என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 45 நாட்களில் மட்டும் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.