வேலையில்லா திண்டாட்டம்: ஆந்திராவில், சேல்ஸ்மேன், கிளர்க்காகும் இன்ஜினியர்கள்
ஹைதராபாத்: ஆந்திராவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதன் எதிரொலியாக பொறியியல் படித்த பட்டதாரிகள் மளிகைக் கடையிலும், கிளார்க்காகவும் பணி புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொறியியல் பட்டதாரிகள் தங்களின் தற்போதிஅய நிலைமை பற்றி நேயர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம், மிடாக் மாவட்டத்தில் உள்ள சக்கரப்பள்ளி பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பணி புரிந்து வரும் 24 வயது விக்ரம் ஒரு பொரியியல் பட்டதாரியாம். இரண்டு வருடம் கஷ்டப்பட்டு வேலை தேடியும், எந்த வேலையும் கிடைக்காத காரணத்தால் மளிகைக்கடை வேலைக்கு வந்துள்ளாராம் இந்த வாலிபர்.
இது தனிப்பட்ட ஒரு வாலிபரின் கதை மட்டுமல்ல, ஆந்திராவின் பெரும்பான்மையான் பொறியியல் பட்டதாரிகளின் நிலைமை இப்படித் தான் உள்ளதாம். அதிகரித்து வரும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையால் ஆண்டுதோறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறதாம்.
ஆனால், படித்து முடித்த அனைவருக்குமே சம்பந்தப்பட்ட துறையிலேயே வேலை கிடைக்கிறதா என்றால் இல்லை, இதனால், அவர்கள் மளிகைக் கடையிலும், அலுவலகங்களில் கிளார்க்காகவும், பள்ளிகளில் ஆசிரியர்களாகவும் பணிக்கு செல்லும் நிலைமை உண்டாகியுள்ளதாம்.
விக்ரமின் சக வகுப்புத் தோழரான ஸ்ரீநிவாஸ் இது குறித்து கூறும்போது, ‘எங்கள் வகுப்பில் படித்த 130 மாணவர்களில் வெறும் 20 பேர் மட்டுமே ஐடி துறைக்கு பணிக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கும் சம்பளம் என்னவோ ரூ6000வாக்கில் தான் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மிடாக்கில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலைக்கு ஆள் சேர்ப்பு நடந்த போது, கல்வித்தகுதி 10 வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதுமான, 90 இடங்களுக்கு எண்பதாயிரம் விண்ணப்பங்கள் குவிந்ததாகவும், அதில் பெரும்பான்மையானது பொறியியல் பட்டதாரிகளுடையது என தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.