அடி மேல் அடி.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெ.வாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி: தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், மின்வெட்டு மீண்டும் திரும்பியுள்ள நிலையில், தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையத்தின் முதல் மின்உற்பத்தி அலகுகின் பழுதால் 210மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின்நிலையல் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 5அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் இயந்திர பழுது, பாய்லர் பழுதுகளால் அவ்வப்போது மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24ம் தேதி அதிகாலை அனல்மின்நிலையத்தின் 3ம் மின்உற்பத்தி யூனிட்டில் பாய்லர் பழுது காரணமாகவும், 5வது மின்உற்பத்தி யூனிட்டில் இயந்திர பழுது காரணமாகவும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டு மின்உற்பத்தி அலகுகளின் பழுதால் 420மெகாவாட் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டது. மின்உற்பத்தி அலகுகளில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்பட்டு இயக்கி வருகின்றன.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தின் முதலாவது யூனிட்டில் பாய்லர் பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பாய்லர் பழுதினை சரிசெய்யும் பணிகள் இன்று அல்லது நாளைக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் மீண்டும் மின்தடை அதிகரித்துள்ள சூழலில் அனல்மின் நிலையத்தின் பாய்லர் பழுதால் மின்தடை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.