கரூர் சாயப்பட்டறை பூங்கா விவகாரம்: பின் வாங்கிய தமிழக அரசு
கரூர்: கரூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கும் விவகாரத்தில் பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் புன்னம், பவுத்திரம் கிராம பஞ்சாயத்து இணைப்பு பகுதியில் சாயப்பட்டறை பூங்கா அமைக்க சுமார் 150 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்பட்டால் புன்னம், பவுத்திரம், விஸ்வநாதபுரி, குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலம் பாதிக்கப்படும் என பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த புன்னம் பஞ்சாயத்து கூட்டத்திலும் சாயப்பட்டறை பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கடந்த ஜூலை 22ம் தேதி நடந்த பொது மக்கள் கலந்தாய்வு கூட்டத்திலும், கடந்த 15ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்திலும் சாயப்பட்டறை பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புன்னம் கிராமத்தில் ரகசியமாக சாயப்பட்டறை பூங்கா அமைக்கப் பணிகள் நடந்து வருவதாக தகவல் அறிந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தங்களது எதிர்ப்புகளை புகார் மனுக்களாக்கி முதல்வர் அலுவலகம், மற்றும் தனிப் பிரிவு என பல நிலைகளிலும் விரிவுபடுத்தினர். இந்த நிலையில் அந்த பகுதியில் சாயப்பட்டறை பூங்கா அமையாது என கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி அறிவித்துள்ளார்.
அதே போன்று, இந்த இபகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான செந்தில் பாலாஜியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் பொது மக்கள் வாக்கு வங்கிக்கு வேட்டை வைத்துக் கொள்ளக் கூடாது என்பாதல் தான் இந்த முடிவாம்.












Click it and Unblock the Notifications