மாயமான சிறுவனின் சடலம் கூவத்தில் மிதந்தது: கொலையா? விபத்தா? போலீஸ் விசாரணை
சென்னை: மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்ட சிறுவனின் உடல் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப் பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மங்கீஸ்கார்டன், திடீர்நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜ். இவரது மனைவி ராஜனி. இவர்களது 2 வயது குழந்தை ஜீவா, நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனான். இதனால், சந்தேகமடைந்த அவனது பெற்றோர் சிறுவனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என ஆயிரம் விளக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் விசாரணையில் இறங்கினார் இன்ஸ்பெக்டர் கந்தவேலு. மாயமான குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளியைக் கண்டு பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் கூவம் ஆற்றில் சிறுவன் ஒருவனது சடலம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அணுப்பி வைத்த பொலீசார், அது காணாமல் போன சிறுவன் ஜீவா தான் என்பதை உறுதி செய்தனர்.
துறுதுறு குழந்தையான ஜீவா அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று விளையாடுவது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து, சிறுவன் விளையாடும் போது தவறி கூவத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், சிறுவனின் மர்ம மரணம் குறித்து, கொலையா, விபத்தா என்ற இரு வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications