இன்று ஆஜராகாவிட்டால் அசாரம் பாபுவை கைது செய்ய ரெடியாக இருக்கும் போலீஸ்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத குருவான அசாரம் பாபு இன்றைக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக ஜோத்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அவரது வழக்கறிஞர் போலீசாருக்கு போன் செய்து அசாரம் பாபுவின் உறவினர் இறந்துவிட்டதால் அவரால் இன்று ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் கூற தான் போலீசார் இவ்வாறு செயல்படுவதாக அசாரம் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக கால அவகாசம் கோரிய அசாரம் பாபுவின் மனுவை போலீசார் நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் இன்று அசாரம் பாபு ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் தயாராக உள்ளனர்.
இதற்கிடையே அசாரம் பாபு கூறுகையில்,
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டால் அப்செட்டாக உள்ளோம். இதனால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என்றார்.
அசாரம் பாபுவின் மகனின் மாமனார் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் இந்த அசாரம் பாபு மீதான குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த நாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.