தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- பஸ் யாத்திரை நடத்துகிறார் ஜெகன் சகோதரி ஷர்மிளா!
கடப்பா: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஒட்டு மொத்த குடும்பமே போராட்ட களத்துக்கு வந்துவிட்டது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகம்.
தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரே தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் விஜயாம்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

சாகும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட்ட விஜயாம்மா
சில நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய விஜயாம்மா கைது செய்யப்பட்டு கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கட்டாய உணவு அளிக்கப்பட்டது. அத்துடன் சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜெகன் அறிவித்ததைத் தொடர்ந்து விஜயாம்மா உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

சிறையில் ஜெகன் உண்ணாவிரதம்
இதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார். அவரை நள்ளிரவில் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக கொண்டு சென்று உண்ணாவிரதத்தை போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

டெல்லியில் விஜயாம்மா போராட்டம்
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஜயாம்மா தலைமையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்பட்டது.

ஷர்மிளா பஸ் பயணம்
தற்போது ஜெகனின் சகோதரி ஷர்மிளாவும் தெலுங்கானா எதிர்ப்புக் களத்துக்கு வந்துவிட்டார். இவர் அண்மையில்தான் மக்கள் யாத்திரை என்ற நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார். தெலுங்கானாவுக்கு எதிராக பஸ் யாத்திரை மேற்கொள்ளப் போகிறாராம் ஷர்மிளா.

செப்.2 முதல் யாத்திரை
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் நினைவு நாளான செப்டம்பர் 2-ந் தேதி முதல் சீமாந்திரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா முழுவதும் பயணம் மேற்கொண்டு தெலுங்கானாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போகிறாராம்.












Click it and Unblock the Notifications