தூத்துக்குடி அருகே பயங்கர விபத்து - சுமோ, டிப்பர் லாரி மோதலில் 3 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு கல்மேடு பகுதியில் டாடா சுமோ காரும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவர் கடந்த 28ம் தேதி வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்ற விழாவிற்கு உறவினர்களுடன் டாடா சுமோ காரில் சென்றார். கொடியேற்ற விழாவினை முடித்துவிட்டு சேவியர் தனது உறவினர்களுடன் நேற்று இரவு தூத்துக்குடி திரும்பினார்.
இவர்களது கார் இன்று காலை தூத்துக்குடி - ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி அடுத்துள்ள தெற்குகல்மேடு பகுதியில் வந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து ஜல்லிகள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று எதிரே வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த டாடா சுமோ காருடன், டிப்பர் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரும், லாரியும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் சுக்குநூறாக நொறுங்கியது.
உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்பு வாகனத்தின் உதவியுடன் பள்ளத்தில் இருந்த காரை மீட்டனர். இந்த விபத்தில் காரில் வந்த சேவியர், அல்போன்ஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். இவர்களுடன் வந்த 4 பேர் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த அலாய் என்பவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தருவைகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேளாங்கண்ணி கொடியேற்று விழாவிற்கு சென்று திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் லயன்ஸ்டவுன் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.