லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல்ல களப்பணியாற்றுவோம் ஜெ. வேண்டுகோள்
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்.. அதற்காக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ போஸ் ஆகியோரது இல்ல திருமணங்களை நடத்தி வைத்தார் ஜெயலலிதா. இந்த திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது:
குடும்ப பாசத்துடன் கட்சி
எந்த அரசியல் இயக்கமும் கடைபிடிக்காத அளவுக்கு குடும்பப் பாசத்துடன் கட்சியை கட்டிக் காப்பாற்றியவர் பேரறிஞர் அண்ணா. இதனை பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பின் இன்று வரை கட்டிக் காக்கின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். இங்கு நடைபெறுவது கழகக் குடும்பங்களின் விழா. பல்வேறு கடமைகளுக்கும், பணிச் சுமைகளுக்கும் நடுவே உங்களை எல்லாம் இப்படி ஒரே இடத்தில் காண்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்வின் சுவை எது?
அறநெறிப்படி வாழ்பவர் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம். சாதகம், பாதகம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்களே வரக் கூடாது என்று நினைப்பது கோழைத்தனம். துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வது தான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால்தான், அதன் முழுப் பலனை நாம் உணர முடியும்.
சோதனைகளை சாதனைகளாக்கிய எம்.ஜி.ஆர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் இதயதெய்வம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா? அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, தீய சக்தியை திக்குமுக்காடச் செய்து இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் நமது இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
எத்தனை மிரட்டல்கள்? உருட்டல்கள்? சதிகள்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நான் சந்திக்காத சோதனைகளா? என்னை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த எத்தனை சதித் திட்டங்கள் தீய சக்தியால் தீட்டப்பட்டன? எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டன? எத்தனை மிரட்டல்கள்? எத்தனை உருட்டல்கள்? இவற்றையெல்லாம் துணிச்சலுடன் நான் எதிர்கொண்டதால் தான், மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறேன்.
தாழ்வு போக்கி தன்னம்பிக்கை வைப்போம்
முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்தால் எந்தப் பிரச்சனையையும், நீங்கள் சமாளித்து விடலாம். இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள், அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாற்பதிலும் வெல்வோம்
திசை மாறிப் போய்க் கொண்டிருக்கும் தேசத்தை நல்வழிப்படுத்த நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, அரசியல் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் எனது அன்பு உடன் பிறப்புகளாகிய நீங்கள் எல்லாம் களப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள், நாற்பதையும் நாமே வெல்வோம் என்று கூறி விடை பெறுகிறேன் என்றார் ஜெயலலிதா.