பாலியல் புகார்: சொன்னபடி போலீசில் ஆஜராகவில்லை அஸரம் பாபு!
ஜோத்பூர்: பாலியல் புகாருக்கு உள்ளான சாமியார் அஸரம் பாபு, போலீசாரிடம் வாக்குறுதி அளித்தபடி ஜோத்பூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் காரணம் கூறியுள்ளார்.
ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் அஸரம் பாபு.
இவரின் ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஜோத்பூர் காவல் நிலையத்துக்கு நேரில் ஆஜராகுமாறு மத்தியப் பிரதேசத்தில் இருந்த அஸரம் பாபுவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை வரை அவர் ஆஜராகவில்லை.
இதுகுறித்து சாமியாரின் மகன் நாராயண் சாய் கூறுகையில், "எனது தந்தை வெள்ளிக்கிழமை டெல்லி செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்திருந்தேன். திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் டெல்லி பயணத்தை ரத்து செய்து விட்டார்," என்றார்.
ஜோத்பூர் மாவட்ட போலீஸ் ஆணையர் அஜய் லம்பா கூறுகையில், "அஸரம் பாபு விசாரணைக்கு ஆஜராகாததற்கான காரணம் நம்பும்படியாக இல்லை. இது போலீசை ஏமாற்றும் முயற்சியாகவும் இருக்கலாம். அவரை விசாரிப்பதற்காக போலீசார் மத்தியப் பிரதேசம் செல்வார்கள்'' என்றார்.