யாருடன் கூட்டணி? எந்தக் கட்சியும் தீண்டத்தகாதது அல்ல: எதியூரப்பா
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் எந்த ஒரு கட்சியும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும் கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, எனக்கு தேசிய கட்சியோ அல்லது மாநில கட்சியோ எதுவும் தீண்டத்தகாத கட்சி அல்ல. அதேபோல் எங்களது கட்சியும் தீண்டத்தகாதது அல்ல.

அடுத்து நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் உள்பட எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் அதுகுறித்து கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.
கர்நாடக ஜனதா கட்சியை வேறு எந்த கட்சியுடனும் இணைக்கும் எண்ணம் இல்லை. அதேபோல், நானும் வேறு கட்சியில் போய் சேர மாட்டேன். லோக்சபா தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சி 8 முதல் 10 இடங்களில் போட்டியிடும் என்றார்.
முன்னதாக, கர்நாடக ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் 19 பேரை எதியூரப்பா அறிவித்தார். மாநில செயல் தலைவராக முன்னாள் அமைச்சர் ஷோபா, மூத்த துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் சி.எம்.உதாசி உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாநில செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஷோபாவுக்கு மைசூர் தலைப்பாகை மற்றும் மாலை அணிவித்து எதியூரப்பா வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications