காற்றின் புண்ணியத்தில் ஓய்ந்திருந்த மின்வெட்டு மீண்டும் வாட்டத் துவங்கிவிட்டது: ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காற்றின் புண்ணியத்தில் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த மின்வெட்டு மீண்டும் வாட்டத் தொடங்கிவிட்டது. சென்னை தவிர மற்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
தலா 600 மெகாவாட் திறன் கொண்ட வட சென்னை மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் மாதமே நடத்தப்பட்டாலும், தொழில்நுட்ப குறைபாடுகளால் அவை மூடப்பட்டதன் காரணமாக இன்று வரை மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை.
அதே நேரத்தில் தீ விபத்து காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின்னுற்பத்தியும், பராமரிப்பு குறைபாடுகளின் காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட்டும் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
தனியார் மூலம் 690 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் தான் வழங்கப்பட்டிருக்கின்றனவே தவிர, அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. மின்வெட்டை சமாளிப்பதில் காற்றை தான் மக்கள் நம்புகிறார்கள்.
இன்றைய நிலையில் தமிழகத்தின் மின்தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும் நிலையில் மின் உற்பத்தி 8 ஆயிரம் மெகாவாட்டாகவே உள்ளது. காற்றாலைகள் மூலம் சுமார் 2000 மெகாவாட் முதல் 3200 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்ததால் மின்வெட்டை சமாளிக்க முடிந்தது. காற்றாலை மின்சாரம் தற்போது 50 மெகாவாட்டுக்கும் கீழ் குறைந்துவிட்டதால் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications