எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கண்காணிக்க விடாமல் இந்திய வீரர்களை தடுக்கும் சீனா
டெல்லி: இந்திய-சீன எல்லையில் இந்திய வீரர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடவிடமால் சீன வீரர்கள் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதி பல இடங்களில் நிர்ணயிக்கப்படாமல் உள்ளது. இதில் இந்திய பகுதியை நம் வீரர்களும், சீன பகுதியை அந்நாட்டு வீரர்களும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய பகுதியை கண்காணிக்க விடாமல் நம் ராணுவ வீரர்களை சீன வீரர்கள் தடுத்து நிறுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்த அறிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசனை போர்டின் தலைவர் ஷ்யாம் சரண் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்துள்ளார். இந்த அறிக்கை கேபினட் குழுவிடமும் காண்பிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் நம் வீரர்களை சீன வீரர்கள் தடுத்து நிறுத்துவதாக முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து லடாக் மற்றும் சியாச்சின் பகுதிகளில் ஆய்வு செய்துவிட்டு வருமாறு பிரதமர் சரணுக்கு உத்தரவிட்டிருந்தார். அவர் நடத்திய ஆய்வில் சீன ராணுவத்தினர் தௌலத் பேக் ஓல்டி பகுதி, தேப்சங் பல்ஜ் மற்றும் சுமாரில் இந்திய வீரர்களை தடுப்பது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.