ஷீலா தீட்சித் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு: எதிர்த்து போலீசார் மனு!
டெல்லி: 2008ம் ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் ஆதாயம் பெறும் வகையில் பத்திரிக்கைகள், டிவிக்களுக்கு அரசு விளம்பரங்கள் கொடுத்த புகார் குறித்து முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து இன்று டெல்லி போலீசார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக 2008ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அரசியல் ஆதாயம் பத்திரிக்கைகள், டிவிக்களுக்கு அரசு விளம்பரம் வழங்கப்பட்டதாக முதல்வர் ஷீலா தீட்சித் மீது புகார் எழுந்தது.
இது குறித்து விசாரித்த செல்லி லோக் ஆயுக்தா, தேர்தலுக்கு முன்பாக அரசு விளம்பரங்களுக்காக ரூ. 22.56 கோடி செலவிடப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் முதல்வர் அவ்வாறு செய்துள்ளார். எனவே அதில் பாதி தொகையில் ரூ. 11 கோடியை முதல்வர் ஷீலா தீட்சித்திடம் இருந்தோ அல்லது அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியிடம் இருந்தோ வசூலிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.
ஆனால், இந்த மீது காவல் துறை ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து ஷீலா தீட்சித் மற்றும் இந்த புகாரில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி டெல்லி பாஜக முன்னாள் தலைவர் விஜேந்தர் குப்தா மற்றும் வழக்கறிஞர் விவேக் கர்க் ஆகியோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், காவல் துறையில் புகார் அளித்த போது, முதல்வர் மீதான குற்றத்துக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதாக அவர்கள் இருவரும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷீலா தீட்சித் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி போலீசார் இன்று டெல்லி உயர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.