இளம் குற்றவாளி என்று சொல்வதற்கு முன்பு அவர்கள் செய்த குற்றத்தை பார்க்க வேண்டும்- உஜ்வால் நிகாம்
மும்பை: ஒருவரை இளம் குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு குறைந்த தண்டனையைக் கொடுப்பதற்கு முன்பு, அவர் செய்த குற்றத்தின் இயல்பைப் பார்த்து பின்னர் தண்டனையை நிர்ணயிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று பிரபல குற்றவியல் வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி, மைனர் என்பதால் அவனுக்கு மிகக் குறைந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்து நாட்டு மக்கள் பெரும் எரிச்சலில் மூழ்கியுள்ள நிலையில் நிகாமின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
மும்பை குண்டுவெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கித் தந்து நாடே தன்னைத் திரும்பிப் பார்க்குமாறு செய்தவர் உஜ்வால் என்பது நினைவிருக்கலாம்.

630 ஆயுள் தண்டனை... 28 மரண தண்டனை
அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு மும்பையில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 630 ஆயுள் தண்டனைகள், 28 மரண தண்டனைகளைப் பெற்றுக் கொடுத்து சாதனை படைத்தவர் நிகாம்.

மும்பை பாலியல் பலாத்கார வழக்கிலும் ஆஜராகிறார்
தற்போது மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் இவரையே சிறப்பு அரசு வழக்கறிஞராக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளதால் அந்த வழக்கு மிகவும் கவனிப்புக்குரியதாக மாறியுள்ளது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்ற நம்பிக்கையும் மக்களிடையே எழுந்துள்ளது.

டெல்லி தீர்ப்பு குறித்து மறைமுக அதிருப்தி
இந்த நிலையில் டெல்லியில் இளம் மாணவி கொடூரமாக ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட வழக்கில் அதில் மிகக் கொடூரமாக நடந்து கொண்ட ஒரு மைனர் பையனுக்கு மிகக் குறைந்தபட்ச தண்டனை கொடுக்கப்பட்டது குறித்து மறைமுகமாக அதிருப்தி தெரிவித்துள்ளார் நிகாம்.

எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்
ஒருவரை இளம் குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு குறைந்தபட்ச தண்டனை கொடுக்கும் முன்பு, அவரது முந்தைய குற்றச் செயல் குறித்த பின்னணி, குடும்பப் பின்னணி, அவர் செய்த குற்றத்தின் தன்மை ஆகியவற்றை முழுமையாக, தெளிவாக பரிசீலிக்க வேண்டும். பிறகுதான் அவர் மைனரா, அவர் செய்தது ஒரு மைனர் பையன் செய்யும் செயல்தானா என்ற முடிவுக்கு வர வேண்டும்.

எல்லோரையும் அப்படிக் கூற முடியாது
வயதை வைத்து மட்டும் பார்த்து அவரை மைனர் என்று முடிவு கட்டி விடுவது சரியாக இருக்காது. எல்லோருக்கும் அது பொருந்தாது. அப்படிச் சொல்வதும் நியாயமாகாது.

முன்பெல்லாம் 16 வயதிலேயே மைனர்
முன்பு மைனர் என்ற நிர்ணயம் 16 வயதாக இருந்தது. ஆனால் உலக நாடுகளின் சிறார் உரிமை சட்டத்தை வழுவி அதை அதிகரித்தனர்.

தற்போது நிலைமை மாறி விட்டது
தற்போது நிலைமை மாறி விட்டது. இது இன்டர்நெட் காலம். இதுபோன்ற சமயங்களில் வெறும் வயதை மட்டும் வைத்து ஒருவரை மைனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. அவர் செய்த குற்றத்தின் தன்மையை முக்கியமாக பார்க்க வேண்டும்.

கசாப்புக்கு தூக்கு கிடைக்க காரணகர்த்தா
மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவி நடத்திய மிகப் பயங்கரமான தாக்குதல் வழக்கில், உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை கிடைப்பதற்காக மிகத் திறமையாக வாதாடியவர் நிகாம் என்பது நினைவிருக்கலாம். கசாப்பைக் கூட அப்போது மைனர் என்று வாதாடினார்கள் அவர் சார்பில் நியமிக்கப்பட்ட வக்கீல்கள். ஆனால் அதை திறமையாக தனது வாதத்தால் உடைத்து ஆதாரங்களுடன் கசாப் மைனர் இல்லை என்பதை நிரூபித்து அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுத்தவர் நிகாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications