கிங்பிஷர் 'கந்தலான' கதை.. தன்னைத் தவிர எல்லோரையும் குறை கூறும் விஜய் மல்லையா!
பெங்களூர்: கிங்பிஷர் விமான நிறுவனம் ஊத்தி மூடப்பட்டதற்கு தன்னைத் தவிர அனைவரையும் குறை கூறியிருக்கிறார் அதன் அதிபர் விஜய் மல்லையா.
நிறுவனம் முடங்கியதற்கு என்ஜின் சப்ளையர்கள், சம்பளமே வாங்காமல் உழைத்த ஊழியர்கள், கடன் கொடுத்த வங்கிகள், வரி விதித்தவர்கள் ஆகியோரே காரணம் என்கிறார் மல்லையா.

மீண்டும் இயக்கப் போகிறாராம்:
கிங்பிஷர் விமான நிறுவனத்தின் 2012-13ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், விமான நிறுவனத்தை மீண்டும் இயக்க முதலீட்டாளர்களுடன் பேசி வருவதாகவும் கூறியுள்ளார். இந்த அறிக்கையை கிங்பிஷர் பங்குகளை வாங்கியவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் மல்லையா கூறியிருப்பதாவது:

கோளாறான என்ஜின்களை தலையில் கட்டிவிட்டனர்:
கிங்பிஷருக்கு மட்டமான என்ஜின்களை International Aero Engines AG நிறுவனம் சப்ளை செய்தது. இதனால் நிறுவனத்துக்கு ரூ. 1,677 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்ட ஈட்டைத் தரக் கோரி என்ஜின் சப்ளையர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார காரணங்களால் கிங்பிஷர் நிறுவனம் சிக்கலான நிலையில் இருந்தபோது இந்த என்ஜின் கோளாறுகளால் மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை உருவானது.

வரி கட்ட சொல்லி டார்ச்சர்...
இப்படிப்பட்ட நிலையில் வரி செலுத்தக் கோரி மத்திய அரசும் பல பிரச்சனைகளை செய்தது. (இது இவர் கட்ட வேண்டிய வரி தான்). வங்கிக் கணக்கை முடக்கிவிட்டன வரி விதிப்புத் துறைகள். மேலும் நிறுவனத்துக்கு வருமானம் வரும் வழியையும் முடக்கிவிட்டனர் (வங்கிக் கணக்குகள் முடக்கத்தை இப்படி சொல்கிறார்).

அதனால் தான் ஊதியம் தரலை...
இதனால் கடன் கொடுத்தவர்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போய்விட்டது. ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் ஊதியம் தர முடியாமல் போய்விட்டது.

வேலை நிறுத்தம் செய்யலாமா?:
ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தம் வேறு செய்து பிரச்சனை தந்தனர் (மாதக்கணக்கில் ஊதியம் வராததால் பைலட்களும், ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்ததை இவ்வாறு குறிப்பிடுகிறார்). இதனால் குறித்த நேரத்தில் விமானங்களை இயக்க முடியவில்லை. இந்த காரணங்களால் தான் விமான நிறுவனத்தின் செயல்பாட்டையே நிறுத்த வேண்டிய நிலை வந்தது.

கடன் கொடுத்துவிட்டு சும்மா தானே இருக்கனும்:
நிறுவனத்துக்கு புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வர முயற்சிகள் எடுத்தோம். ஆனால், அதை கடன் கொடுத்தவர்கள் சரியாக ஆதரிக்கவில்லை (விஜய் மல்லையாவை நம்பி ஸ்டேட் பாங்க் தலைமையிலான பல வங்கிகளும் ரூ. 7,000 கோடிக்கும் மேல் கடன் கொடுத்துள்ளன. இது முழுக்க முழுக்க மக்கள் பணம்). அவர்களது ஆதரவு இல்லாததால் தான் புதிய முதலீடுகளைக் கொண்டு வர முடியவில்லை

வங்கிகள் ஜகா வாங்கியது ஏன்?:
(வாங்கிய கடனை திருப்பித் தர மல்லையா எந்த உத்தரவாதமும் தராததால் வங்கிகள், அவர் இந்த நிறுவனத்தை வைத்து முதலீடு என்ற பெயரில் மேலும் கடன் வாங்குவதை வங்கிகள் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

திட்டம் தயாரிச்சு இருக்காராம்...
இப்போது விமான நிறுவனத்தை மீண்டும் இயக்கும் திட்டம் தயாரித்துள்ளோம். அதன்படி அடுத்த 3, 4 மாதங்களில் 5 ஏர்பஸ் விமானங்கள், 2 ஏடிஆர் விமானங்களுடன் சிறிய அளவில் மீண்டும் விமான சேவையைத் தொடங்குவோம். இதற்காக எனது யுனைட்டட் பிரவரீஸ் நிறுவனம் ரூ. 650 கோடியை ஒதுக்கும்.

புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து....
இரண்டாவது கட்டமாக புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து, கடன்களை திருப்பித் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தூற்றுவார் தூற்றட்டும்...
மீடியாக்கள் நம்மைப் பற்றி தொடர்ந்து தவறாகவே எழுதினாலும் உங்களது நிறுவனம் தொடர்ந்து புதிய முதலீடுகளைப் பெறவும், மீண்டும் விமான சேவையைத் தொடங்கவும் தீவிரமாக உள்ளது என்று கூறியுள்ளார் விஜய் மல்லையா.
மல்லையா இது போல உத்தரவாதம் தருவது இது முதல்முறையல்ல..












Click it and Unblock the Notifications