12 பவுன் செயினை பறித்துவிட்டதாக புகார்: தேமுதிக எம்.எல்.ஏ. மீது திருட்டு வழக்கு
காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் அனகை முருகேசன். அவருக்கும் தேமுதிக குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ. அசோக்கிற்கும் இடையே கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் ஆகாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது முருகேசனுக்கும், அசோக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததில் அசோக் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அசோக் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று கூறப்படுகிறது.
காயமடைந்த அசோக் அன்று இரவே குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு அவர் மறுநாள் காலை அதாவது திங்கட்கிழமை குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று அனகை முருகேசன் மற்றும் 2 பேர் சேர்ந்து தன்னை தாக்கி, தான் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்துவிட்டதாக புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், அவரது கார் டிரைவர், தலைமை கழக பேச்சாளர் வளர்பிறை சோழன் ஆகிய 3 பேர் மீதும் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.