கட்டிய தாலியை அறுத்துவிட்டு கணவருக்கு 2வது திருமணம்…: கலெக்டரிடம் புகார் கொடுத்த காதல் மனைவி
புதுக்கோட்டை: காதல் திருமணம் செய்து கொண்ட தனது தாலியை அறுத்து எறிந்துவிட்டு தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வதாக இளம் பெண் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை கிராமத்தைச் சேந்த இளம்பெண் பாண்டிச் செல்வி(22) . இவர், திங்கள் கிழமை இரவு 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் திருப்பூரில் வேலை செய்த போது இலுப்பூர் தாலுகா விளாப்பட்டி முருகேசன் மகன் சரத்குமார் என்பவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்தோம். அப்போது இருவரும் காதலித்து கடந்த 10.7.13 அன்று திருப்பர் மரக்கடை செல்வவிநாயகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணம் கோயில் பதிவில் உள்ளது. மேலும் திருமண படங்களும் எடுத்துக் கொண்டோம்.
இந்த நிலையில் எங்களை ஊருக்கு அழைத்து வந்த அவரது உறவினர்கள் என் தாலியை அறுத்து எரிந்து சரத்குமாரை மிரட்டி இழுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து நான் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் என் காதல் கணவர் சரத்குமாருக்கு நாளை வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆகவே அந்த திருமணத்தை நிறுத்தி என்னை என் கணவருடன் வாழவைக்க கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் இளம் பெண் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.