ஆசாராம் பாபு மீது 'பாக்சோ' சட்டம் பாய்கிறது...!
ஜெய்ப்பூர்: சாமியார் ஆசாராம் பாபு மீது கடுமையான பிரிவுகளைக் கொண்ட பாக்சோ சட்டத்தைப் பிரயோகிக்க ஜோத்பூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில்தான் இந்த சட்டம் அமலுக்கு வந்தது நினைவிருக்கலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டமான பாக்சோ, கடுமையான சட்டப் பிரிவுகளைக் கொண்டதாகும்.
இந்த சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் ஆசாராம் பாபு கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. தனது பொறுப்பில் இருந்த மைனர் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கும் பிரிவாகும் இது.
ஆசிரமம் பள்ளியில் படித்த சிறுமி
ஆசாராம் மீது பாலியல் புகார் கூறியுள்ள 16 வயது சிறுமி, ஆசாராமின் ஆசிரமத்தில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார் என்பதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.
பள்ளிக்கும், ஆசாராமுக்கும் உள்ள தொடர்பு
இதையடுத்து அந்தப் பள்ளிக்கும் ஆசாராமுக்கும் இடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
7 வருஷம் சிறைதான்
இந்தத் தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டாலே போதும் ஆசாராமுக்கு அதிகபட்சம் 7 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
ஆசாராமும் ஆசிரமும்
ஆசாராம் பொறுப்பி்ல்தான் அவரது ஆசிரமம் இருக்கிறது என்பது உறுதியானாலே கூட போதும், அவர் நடத்தி வரும் பள்ளியும், ஹாஸ்டலும் கூட அவரது பொறுப்பில்தான் வருவதாக அர்த்தம். இதன் மூலம் அவருக்கு பெரும் சிக்கல் உண்டாகும் என்று காவல்துறையினரும் கூறுகின்றனர்.