ஒடிஷாவில் கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்துக் கொடுத்த 'பலே' நாய்
பெர்ஹாம்பூர்: ஒடிஷா மாநிலத்தில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாய் ஒன்று உதவி செய்துள்ளது.
ஒடிஷா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பென்கபேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மேகா மாலிக்(65). அதே கிராமத்தைச் சேர்ந்த சம்பு மாலிக், கார்த்திகா மாலிக், சனாதனா சாஹூ மற்றும் ஒருவர் சேர்ந்து மேகாவை கோடாரியால் வெட்டிக் கொன்று அவரது உடலை காட்டுப் பகுதியில் போட்டுவிட்டனர்.
காட்டுப் பகுதியில் மேகா பிணமாகக் கிடந்ததை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கண்டுபிடித்தனர். மேகா சூனியம் செய்ததால் அவர் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேடுதல் வேட்டையில் ஃபெய்த் என்ற 2 வயது மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய் குற்றவாளிகளான சம்பு மாலிக், கார்த்திகா மாலிக் மற்றும் சனாதனா சாஹூ ஆகியோரை கைது செய்ய உதவியது. நாலாவது நபரை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கோடாரியை அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளனர். அதை குளத்தில் இருந்து எடுக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
சாக்லேட் நிறத்தில் உள்ள ஆண் லேப்ரடாரான ஃபெய்த் இதற்கு முன்பும் பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications