குடும்பத்தோடு குடித்தபோது தகராறு... பெண் அடித்துக் கொலை - கணவன், மகன் கைது
கொல்லம்: கேரளாவில் குடும்பத்தோடு ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மனைவி அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக தென்காசியை சேர்ந்த கணவன், மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் 30 வருடங்களுக்கு முன் கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சூரநாடு பகுதியில் குடியேறினார். அங்கு கூலி தொழில் செய்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த அம்பிளி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், சிந்துமாலினி என்ற மகளும் உள்ளனர். கடந்த வருடம் சிந்து மாலினிக்கு திருமணம் நடந்தது.
தினசரி இரவு நேரங்களில் மாரியப்பன், அம்பிளி, மனோஜ் மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்துவது வழக்கம். மூன்று தினங்களுக்கு முன் இரவில் 3 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களிடையே மதுவை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மாரியப்பன், மனோஜ் இருவரும் சேர்ந்து அம்பிளியை கம்பால் தாக்கி கீழே தள்ளினர். இதில் படுகாயம் அடைந்த அம்பிளி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவர் போதையில் விழுந்து விட்டதாக நினைத்து இருவரும் சேர்ந்து தூக்கி சென்று படுக்கை அறையில் படுக்க வைத்தனர்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் மாரியப்பனும், மனோஜூம் கூலி வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் அவர்கள் திரும்பி வந்த போதும் அம்பிளி எழுந்திருக்கவில்லை. இதையடுத்து மயங்கி நிலையில் கிடந்த அம்பிளையை சாஸ்தா கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அங்கு அம்பிளி இறந்தார்.
அவரது தலையில் காயம் இருந்ததால் மருத்துவமனை டாக்டர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையி்ல் மதுகுடித்தபோது அம்பிளியை தாக்கியதில் கீழே விழுந்ததாக இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications