எம்.பி.பி.எஸ். சீட் 2 கோடி சுருட்டிய டாக்டர் உள்பட 4 பேர் கைது
சென்னை: எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்த டாக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் ஆதவன்(வயது50). பிவிசி பைப் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் மகள் அமிர்தமலர்(18). இவர் 2012ல் பிளஸ்-2 தேர்வில் 997 மார்க் எடுத்திருந்தார்.
ஆதவன் தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டு பல இடங்களில் முயற்சி செய்தார். ஆனால் டாக்டர் சீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த தொழில் ரீதியிலான நண்பர் ஜான்பீட்டர்(43). வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் டாக்டர் சீட் வாங்கி விடலாம். அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் 35 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கட்டமாக 15 லட்சம் ரூபாய் பணம் வேலூர் சி.எம்.சி. அருகே வைத்தும் 16ம் தேதி 20 லட்சம் ரூபாயும் ஜான்பீட்டரிடம் ஆதவன் வழங்கியுள்ளார்.ஆனால் 4 மாதங்கள் கடந்தும் அமிர்தமலருக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை.
இதனால் ஆதவன் ஜான்பீட்டரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ஜான்பீட்டரோ நாட்களை கடத்தி வந்தார். தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ஆதவன் வேலூர் எஸ்.பி. விஜயகுமாரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பபட்டது.
இதையடுத்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தமிழரசி, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில், ஜான்பீட்டர் தமிழகம் முழுவதும் நெட்ஒர்க் வைத்து பணத்தை மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
அவர் தலைமையில் ஒரு கும்பல் பணக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.இதை தொடர்ந்து ஜான்பீட்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் நாகர்கோவிலை சேர்ந்த வசந்த குமாரி என்பவர் தன் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கேட்டு ஜான்பீட்டரிடம் 61 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். இதேபோன்று தமிழகம் முழுவதும் பலரிடம் இந்த கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. இக்கும்பல் சுருட்டிய தொகை மட்டும் 2 கோடி ரூபாயை தாண்டும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஜான்பீட்டர் கொடுத்த தகவலின்படி சேலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(36), மோகன்ராஜ்(27), புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் இளங்கோ(34) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த சில்வர் ஸ்டான் ஜேம்ஸ், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த காட்சன், அதே ஊரை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications