லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி? விருதுநகர் மாநாட்டில் அறிவிக்கும் வைகோ
வேலூர்: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று விருதுநகரில் நடைபெற உள்ள மாநாட்டில், அறிவிக்கப் போவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க. தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு இலங்கை தமிழர், கச்சத்தீவு, நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என மத்திய அரசு பிரணாம பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இதனை மத்திய அரசு தாக்கல் செய்ததா? அல்லது இலங்கை கூறியபடி தாக்கல் செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை.
விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசே காரணம். இதற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.
''விருதுநகரில் வருகிற 15 ஆம் தேதி ம.தி.மு.க. மாநாடு நடைபெறுகிறது. எங்கள் கட்சி நேர்மையாக உள்ளதால் பல லட்சம் மக்கள் விருதுநகரில் கூடுவார்கள்.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படும். விரைவில் அகில இந்திய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படும்.