ஓணம் பண்டிகை: செப்.14 சபரிமலை கோயிலில் நடை திறப்பு
சபரிமலை: ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ம் தேதி திறக்கப்படுகிறது. அன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஸ்வரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி, நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
மறுநாள் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் தொடங்கும். 16ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு ஓணம் சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு ஓணம் விருந்து அளிக்கப்படும்.
ஓணம் சிறப்பு பூஜைகளுக்கு இடையே புரட்டாசி மாத பூஜைகளும் வருவதால் வரும் 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் நடை திறந்திருக் கும். 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகிய வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் நெய் அபிஷேகமும் நடைபெறும்.
வரும் 21ம் தேதியுடன் ஓணம், புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் நிறைவடையும். அன்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்படும்.












Click it and Unblock the Notifications